News

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலி..!

யானைப் பாதுகாப்புக்கென பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலியான சம்பவமொன்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி ஈச்சையடி, கடான பிரதேசத்தில் மாடுகளை விரட்டிச்சென்ற போது,

இருளில் சூழ்ந்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த,

மின்சார வேலியில் சிக்குண்டே ஆறுமுகன் யோகநாதன்(50), வினாயகமூர்த்தி(21) சுதர்ஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் திரு அல்பேர்ட் தலைமையில் சென்ற எம்.ஏ.எம்.அக்ரம் (92658) குழுவினர் மற்றும்,

கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேசங்களுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி சபாபதி ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனைக்காக உடல்கள் அகீல் அவசர உதவிப்பிரிவின் வாகனத்தினூடாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்சாரத்தைப்பெற்று பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டே இருவரும் உயிரிழந்துள்ளதுடன், சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றமை,

அதன் மூலம் இரு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *