Breaking NewsLatestWorld

இஸ்ரேல் அமைச்சர்களுக்கு அயர்லாந்து அதிரடி தடை: காசா விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

காசா பகுதியில் தொடரும் போர் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் இருவர் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்கு அயர்லாந்து அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.  

அமைச்சர்களின் தீவிரப் போக்கிற்கு அயர்லாந்து கண்டனம்

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் கிவிர் (Itamar Ben Gvir) மற்றும் நிதி அமைச்சர் பெசலல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) ஆகியோரே இவ்வாறு அயர்லாந்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டவர்களாவர். கடந்த ஜூன் 5 அன்று அயர்லாந்தின் நீதி அமைச்சகம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், இவர்கள் இருவரும் அயர்லாந்திற்குள் நுழைய முற்பட்டால் அவர்களை எல்லையிலேயே நிராகரிக்குமாறு குடிவரவு அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் ஜிம் ஓ’கலகான் (Jim O’Callaghan) உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தடைக்கான பின்னணி என்ன?

கடந்த மே மாதம் காசா பகுதியை நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பலில் இருந்த சர்வதேச மற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆதரவாளர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன. அவ்வாறு கைது செய்யப்பட்ட மனிதநேய ஆர்வலர்களை இஸ்ரேலிய அமைச்சர் பென் கிவிர் பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்து பதிவிட்டிருந்தார். இந்தச் செயல் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து மாண்டினீக்ரோவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கருத்து தெரிவித்த அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் (Micheál Martin),

இஸ்ரேலிய அமைச்சர்களின் தொடர்ச்சியான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் பாலஸ்தீனத்தில் இருந்து பாலஸ்தீனர்களை முழுமையாக அகற்றும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவே அமைகின்றன. இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய மட்டத்திலும் தடைகளை எதிர்கொள்ள நியாயமானவை” எனத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் அதிகரிக்கும் நெருக்கடி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கக் கூட்டணியின் தூண்களாகக் கருதப்படும் பென் கிவிர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோர், பாலஸ்தீனர்களுக்கு எதிரான தீவிரக் கொள்கைகளுக்காக சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இவர்களுக்கு எதிராகப் பயணத் தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது அயர்லாந்தும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.  

உலகளாவிய மற்றும் நம்பகமான உடனுக்குடனான செய்திகளை உடனே தெரிந்துகொள்ள KVC Media இணையதளத்தை எப்போதும் இணைந்திருங்கள்.