ஜூன் 1 முதல் புதிய விதி: UAE-யில் சம்பள தாமதத்திற்கு அதிரடி தடை!
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள பாதுகாப்பு அமைப்பில் (Wage Protection System – WPS) மிக முக்கியமான மற்றும் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய தீர்மானத்தின்படி (Resolution No. 340 of 2026), நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை வழங்கும் முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
15 நாட்கள் கால அவகாசம் ரத்து – முதல் நாளே இறுதி கெடு!
இதற்குமுன்னர் நடைமுறையில் இருந்த விதிகளின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் ஒப்பந்தப்படி மாத இறுதியில் அல்லது இடைப்பகுதியில் சம்பளம் வழங்க அனுமதி இருந்ததுடன், 15 நாட்கள் கூடுதல் கால அவகாசமும் (Grace Period) வழங்கப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தின்படி இந்த 15 நாட்கள் கால அவகாசம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிரிகோரியன் மாதத்தின் முதல் நாளுக்குள் (1st day of the month) ஊழியர்களின் முந்தைய மாத சம்பளம் முழுமையாக ‘WPS’ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி வழிகள் மூலம் செலுத்தப்பட வேண்டும். முதல் நாளுக்குப் பிறகு வழங்கப்படும் சம்பளம் அனைத்தும் “தாமதிக்கப்பட்ட சம்பளம்” (Delayed Salary) என்றே கருதப்படும்.
முக்கிய குறிப்பு: நிறுவனங்கள் தங்களது மொத்த ஊழியர்களின் சம்பளத்தில் குறைந்தபட்சம் 85 சதவீதத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தியிருக்க வேண்டும். தனிநபர் அடிப்படையில் சட்டபூர்வ பிடித்தங்கள் போக 85% சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தவறினால் அது விதிகளின் மீறலாகக் கருதப்படும்.
சம்பள தாமதத்திற்கான அடுக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள்
புதிய சட்டத்தின் கீழ், சம்பளம் தாமதமாகும் பட்சத்தில் அரசாங்கம் உடனடியாகவும் வேகமாகவும் தண்டிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குகிறது:
2-ஆம் நாள்: சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு அமைச்சகத்தால் உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் விடுக்கப்படும்.
5-ஆம் நாள்: புதிய பணி அனுமதிகளை (Work Permits) பெறுவதிலிருந்து அந்நிறுவனம் உடனடியாக முடக்கப்படும்.
11-ஆம் நாள்: நிறுவனத்திற்கு நிர்வாக அபராதங்கள் விதிக்கப்படும் மற்றும் நிறுவனத்தின் தரம் (Classification) குறைத்து மதிப்பிடப்படும்.
16-ஆம் நாள்: தொழிலாளர்கள் புகார் அளிக்காமலேயே, அரசாங்கமே தானாக முன்வந்து நிறுவனத்தின் மீது தொழிலாளர் தகராறு (Labour Dispute) வழக்கை பதிவு செய்யும். 25-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காத பெரிய நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகள் விதிக்கப்படும்.
21-ஆம் நாள்: இறுதி கட்டமாக சட்ட நடவடிக்கைகள் பாயும். நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், சம்பளம் வழங்கத் தவறிய பொறுப்பதிகாரி அல்லது நிறுவன உரிமையாளருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை (Travel Ban) விதிக்கப்படும்.
விதிவிலக்கு யாருக்குப் பொருந்தும்?
நீதிமன்றத்தில் சம்பள வழக்கு நிலுவையில் உள்ள ஊழியர்கள், வேலைக்கு வராமல் தலைமறைவானவர்கள் (Absconding), காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், ஊதியம் இல்லாத விடுப்பில் (Unpaid Leave) உள்ளவர்கள் மற்றும் 3 மாதங்களுக்கும் குறைவான தற்காலிக பணி அனுமதி பெற்ற ஊழியர்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் தாமதமாகும் பட்சத்தில், MoHRE-ன் அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவோ அல்லது அதன் ஹாட்லைன் (600590000) மூலமாகவோ ஊழியர்கள் நேரடியாகப் புகார் அளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான துல்லியமான மற்றும் நம்பகமான செய்திகளை உடனுக்குடன் பெற www.kvcmedia.lk இணையதளத்தைத் தொடர்ந்து பாருங்கள்.
